Saturday, July 22, 2023

கையில் கத்திரிகோலும் சீப்புமாக ஒரு நாவிதர் கோலத்தில் திரு ஸ்டாலின்

ராதா மனோகர் : 2019 மே மாதம் வெளியான  விகடனில் இந்த படம்

வந்திருக்கிறது . திரு ஸ்டாலின் அவர்களின் கையில் கத்திரிகோலும் சீப்புமாக அவரை ஒரு நாவிதர் கோலத்தில்  பார்க்க அவாளின் ஆனந்தவிகடன் ஆசைப்பட்டிருக்கிறது .
திமுகவுக்கு இது ஒரு வரலாற்று பெருமை என்பது அவர்களுக்கு புரியாது.
திமுகவின்  வரலாற்றில் நாவிதர்களுக்கு ஒரு இடம் இருக்கிறது.
முடிதிருத்தும் சலூன்கள் அந்த காலத்தில்  படிப்பகங்களாகவும் பயன்பட்டன.  
அந்த சலூன்கள் அரசியல் கருத்துருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தன.  
காசு கொடுத்து பத்திரிக்கை வாங்குவது என்பது மிகப்பெரிய ஒரு விடயமாக இருந்த அந்த காலங்களில் சலூன்களில் வாங்கப்படும் பத்திரிகைகள் பலருக்கும் படிப்பகங்களாக ..
 குறிப்பாக பத்திரிகைகள் வாங்க காசில்லாதவர்களுக்கு அது ஒரு பெரும் வாய்ப்பு.
மேட்டுக்குடியின் வாழ்க்கையில் இருந்த வாசிப்பு பழக்கம் சாதாரண மக்களுக்கும் சென்றடைவதற்கு சமுக நூல் நிலையங்களுக்கு இணையான அல்லது அதற்கு மேலான ஒரு இடத்தை முடி திருத்தும் சலூன்களும் வகித்தன.  
அவைதான் திராவிட முன்னேற்ற கழகத்தின் கருத்துருவாக்க மேடைகளாக  பெரிதும் இருந்தன.
திமுகவுக்கு சலூன் கட்சி என்ற அடைமொழியும் உலாவியதுண்டு .
இலங்கையிலும் முதல் முதலில் சலூன்களில்தான் திராவிட முன்னேற்ற கழகம் பற்றிய செய்திகளை சமுகம் அறிந்து கொண்டது.
நான் கூட  திமுக தலைவர்களின் படங்களை எனது கிராமத்தில் இருந்த முடித்திருத்தகத்தில்தான் முதன்முதலாக கண்டேன்
1967 இல் இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு மாநில கட்சி ஆட்சிப்பொறுப்பேற்றது  
பேரறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்ற கழக அரசு அமைந்தது!
அந்த அமைச்சரவையில் இருந்த நாவலர் நெடுச்செழியன் கலைஞர் கருணாநிதி பேராசிரியர் அன்பழகன் சத்தியவாணிமுத்து அம்மையார் திரு மதியழகன் திரு.வேழவேந்தன் திரு.அன்பில் தர்மலிங்கம் போன்றவர்களின் பெயர்களும்  படங்களும் இருந்ததாக எண்ணுகிறேன்.
ஆனால் அங்கு எந்த இலங்கை தலைவர்களின் படத்தையும்  நான் கண்டதில்லை.
திமுக சலூன்களில் இருந்து பரவியதாலோ என்னவோ  திமுக ஒரு நாவிதர்களின் கட்சி போன்ற ஒரு தோற்றம் ஆதிக்க ஜாதியினரின் மனதில் இருந்தது .
அதுதான் இன்றளவும் அவர்களுக்கு திமுக மீது இருக்கும் ஒவ்வாமைக்கு காரணம்

No comments:

Post a Comment