Thursday, December 1, 2022

இலங்கை தமிழரசு கட்சியின் திராவிட இருட்டடிப்பும் அதன் விளைவுகளும்

Radha Manohar :  இலங்கை சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் இலங்கை தமிழர்களிடையே ஒரு பொது அரசியல் மேடையே உருவாகி இருக்கவில்லை .
அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் வேட்பாளர்களின் தனிப்பட்ட குணங்கள் செல்வாக்கு போன்றவற்றின் அடிப்படையிலேயே அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
குறிப்பாக தமிழ் சிங்களம் என்ற பிரிவு பேதம் வெறுப்பு எதிர்ப்பு போன்றவை இருக்கவே இல்லை.
சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தமிழர்களின் நலன்களை முன்னிட்டு உருவான கட்சி .
அதன் தலைவராக திரு ஜி ஜி பொன்னம்பலம் இருந்தார் அவரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட பலரில் எஸ் ஜெ வி செல்வநாயகம் ஜான் ஜெபரத்னம்  நாகநாதன் போன்றவர்களும் அடங்குவர்.
தமிழ் காங்கிரஸ்  கட்சியின் ஆதரவு தளம் என்பது பெரும்பாலும் நீண்ட பாரம்பரியம் கொண்ட சைவ கனவான்களின் ஆதிக்கத்திலே இருந்தது.
இந்த சைவ அரசியல் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு செல்வநாயகம் நாகநாதன் போன்றவர்கள் எடுத்த முயற்சிதான் இலங்கை தமிழரசு கட்சியின் தோற்றம் என்று கருதுகிறேன்

புதிய தமிழ் அரசியல் கட்சியை இவர்கள் உருவாக்கியதற்கு   மலையக வாக்குரிமை பறிப்பே காரணம் என்று இவர்கள்  கூறினாலும்,


அதுவல்ல உண்மையான காரணம்  என்று பின்பு வந்த சம்பவங்கள் தெளிவாக காட்டுகிறது

மலையக மக்களின் வாக்குரிமைக்காக தமிழரசு கட்சி பின்பு எதுவும் செய்யவே இல்லை
தமிழரசு கட்சியின் தோற்றத்திற்கு அதுதான் காரணம் என்ற மக்கள் நம்பும் அளவில் மட்டும் ஒரு பிரசாரத்தை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மேற்கொண்டார்கள்

தமிழரசு கட்சியின் மலையக மக்களின் உரிமை பிரசாரத்தை நம்பி அவர்களோடு பயணித்த இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் இந்த விடயத்தில் ஏமாந்தது.


இ தி மு க  தடை செயப்பட்டபோது அதற்கு எதிராக தமிழரசு கட்சி பெரிதாக ஒன்றுமே செயலவில்லை.

இ தி மு க பொதுச்செயலாளர் தோழர் இளஞ்செழியன் திரு. செல்வநாயகத்தின் வீடு தேடி சென்று வாக்குவாதப்பட்ட காரணத்தால் நாடாளுமன்றத்தில் திரு அமிர்தலிங்கம் அவர்கள் இதை கண்டித்து பேசினார்
சாமுவேல் செல்வநாயகமோ ஜான் ஜெபரத்னம் நாகநாதனையோ வாயே திறக்கவில்லை.
அதுமட்டுமல்ல .இ தி மு கவை உடைக்கும் வேலையையும் பார்த்தார்கள்
இளஞ்செழியனை ஓரம் கட்டிவிட்டு அதன் இன்னொரு தலைவரான மணவை தம்பியை சேர்த்து கொண்டார்கள்.
தமிழரசு கட்சியின் சுதந்திரன் பத்திரிகையில் தோழர் இளஞ்செழியன் மீது சேறு வாரி வீசவும் தயங்காவிலை திரு.மணவை தம்பிக்கு மட்டும் வெளிச்சம் பாய்ச்சினார்கள்.

மேலும் இ தி மு கவின் தடைக்கு எதிராக செயல்பட வேண்டிய தமிழரசு கட்சி அதே நேரத்தில் அதற்கு போட்டியாக இலங்கை தொழிலாளர் கழகம் என்ற இயக்கத்தையும் ஆரம்பித்தார்கள்.

தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் எப்படியோ அப்படித்தான் இலங்கையில் தமிழரசு கட்சி என்று இலங்கை தமிழர்களை நம்பவைத்தார்கள்  அதற்கு இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தை பயன்படுத்தி கொண்டார்கள்.
தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக வெடித்த போராட்டத்தை இலங்கையில் சிங்கள மொழிக்கு எதிரான ஒரு போராட்டமாக கட்டமைத்தார்கள்
தமிழரசு கட்சியின் அத்தனை மேடைகளிலும் திராவிட பாடல்களை தவறாது ஒலிபரப்பினர்கள்.
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பேரறிஞர் அண்ணா கலைஞர் நெடுச்செழியன் போன்ற பெயர்களை உச்சரித்தார்  கைதட்டல்களை   எதிர்பார்த்து கலரியை மகிழ்வித்தார்கள்.  

சிங்கள இனவாதிகளின் குரல் உரத்து மேலெழுவதற்கு என்னென்ன விதமாக பேசவேண்டுமோ அப்படி அப்படியே பேசினார்கள் எழுதினார்கள்

தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை காட்டி தமிழர்களை உசுப்பேத்தினார்கள்.
உசுப்பேற்றப்பட்ட தமிழர்களுக்கு சிங்கள மக்களை எதிரிகளாக கட்டமைத்தார்கள்

இவர்களின் இனவாத வெறுப்பு அரசியலுக்கு சிங்கள இனவாதிகளும் சற்றும் குறைவில்லாமல் பக்கவாத்தியம் வாசித்தனர்

இந்த பின்னணியில் இருந்து கொண்டு திரு அமிர்தலிங்கம் அவர்களின்  அவர்கள் பேசியதை கேட்கவேண்டும்:

தமிழரசு கட்சியின் ஆரம்ப கூட்டங்களில் மக்கள் தமிழ் தேசிய கருத்தையே ஏற்று கொள்ளவில்லை . கல்மாரி பொழிந்தார்கள்   
தேர்தலில் பெருவாரியான தமிழரசு தலைவர்கள் மக்கள் தோற்கடித்தார்கள்
1952 இல் தமிழரசு கட்சியின் வெறுப்பு அரசியலை தூக்கி வீசிய மக்களை செல்வநாயகம் நாகநாதன் கம்பனியினர் திறமையாக மூளை சலவை செய்ததின் பயனாக  
1956 இல் தமிழரசு கட்சியின் பெருவெற்றி பெற்றார்கள்
இவர்களின் அரசியல் ஆதிக்கத்திற்காக உருவாக்கப்பட்ட வெறுப்பு அரசியல் இவைகளையே காவு கொண்டது .. தொடர்ந்து வெறுப்பு அரசியல் வியாதி மக்களை சிந்திக்க விடுவதாயில்லை.

(இது ஒரு முக்கிய ஆவணம்) . இலங்கை தமிழர்களால் விலக்கி வைக்கப்பட்ட தமிழ் தேசிய வெறுப்பு அரசியல் பின்பு எப்படி அதே மக்களின் மூளைக்குள் திணிக்கப்பட்டது என்பதை தமிழரசு தலைவர் திரு அமிர்தலிங்கமா அவர்களின் இந்த காணொளி பேச்சில் இருந்து தெரிந்து கொள்ளலாம்

அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் திரு தர்மலிங்கம் திரு ஆலாலசுந்தரம் ஆகியோரின் நினைவஞ்சலி கூட்டத்தில் பேசியது:

இந்த தமிழீழம் என்ற இலட்சியினம் தமிழ் மக்களுடைய இதய தாகமாக திடீரென்று முளைத்த ஒன்றல்ல
இலங்கையின் அரசியலை தமிழ் மக்களுடைய அரசியல் வளர்ச்சியை அறிந்தவர்கள் அப்படி ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். இந்த  நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இலங்கையர் என்ற ஒரு இனத்தை கற்பனை செய்து  இலங்கை தேசிய காங்கிரஸ் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி  அதன் முதல் தலைவராக ஒரு தமிழ் மகன் பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் இருந்து தமிழர் சிங்களவர் பறங்கியர் இஸ்லாமியர் என்ற பேதமற்று இலங்கையர் என்ற ஒரு அடிப்படையில் ஆங்கில ஆட்சியை எதிர்த்து போராடவேண்டும் என்ற கருத்தை முன்வைத்த காலமொன்று இருந்தது

அதன் பின்பு படிப்படியாக இலங்கை அரசியலின் கட்சி அதிகாரம் மாறிய நேரத்தில் அந்த அதிகாரத்தை பெரும்பான்மையோர் என்ற காரணத்தால் தம் கையில் பெற்று கொண்ட சிங்கள அரசியல் வாதிகள் ஒரு இனம் ஒரு மதம் ஒரு மொழி என்ற அடிப்படையில் அந்த அரசியலை நடாத்தி செல்கின்றார்கள் என்ற அந்த நிலை ஏற்பட்ட போது,

தமிழ் மக்கள் மத்தியில் தமது தனித்துவத்தை . தம்மை பாதுகாத்து கொள்ள வேண்டுமென்ற ஒரு கருத்து மெல்ல எழத்தொடங்கியது.

ஆனால் அது கூட தமெக்கென்று ஒரு பிரதேசம் உண்டு

தமிழீழம் என்ற ஒரு தாயகம் உண்டு என்ற அடிப்படையிலே எழவில்லை.

இலங்கை முழுவதிலும் மத்திய தர வகுப்பை சேர்ந்தவருடைய வேலைவாய்ப்பு வர்த்தகம் இப்படியான சலுகைகளை பாதுகாக்கக் கூடிய  உரிமை நிலை நாட்டப் படவேண்டும் என்ற அடிப்படையிலேதான் அந்த அரசியல் நடைபெற்று வந்தது.

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றது.

சுதந்திரம் பெற்று ஆறுமாதங்களுக்கு இடையில் இலங்கையில் தமிழினத்தை அதுவும் தமிழ் தொழிலாளிகளை மிகமிக மோசமாக பாதிக்கின்ற சட்டங்கள் .. குடியுரிமை சட்டங்கள் என்ற பேரில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.

இலங்கை மண்ணுக்காக உழைத்து உழைத்து உருக்குலைந்த தேயிலை ரப்பர் தோட்ட தமிழ் தொழிலாளிங்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டார்கள் வாக்குரிமையற்றவர்கள் ஆக்கப்பட்டார்கள்

அவர்களுடைய அரசியல் உரிமைகள் அத்தனையும் பறிக்கப்பட்டன.

உழைத்து உழைத்து உருக்குலைந்து இலங்கையின் தேயிலை செடிகளுக்கு தங்கள் உடல்களை உரமாக்கிய அந்த தமிழ் தொழிலாளிகள் உரிமை பறிக்கப்பட்ட நிலை ஏற்பட்டபோதுதான்

மறைந்த எங்கள் தலைவர் தந்தை செல்வநாயகம் அவர்கள் முதல் முதலாக தமிழர்களுக்கு ஒரு பிரதேசம்     

ஒரு தாயகம் உண்டு அந்த தாயகத்தில் தன்னாட்சி தமிழ் மக்கள் பெற்றாலன்றி எமக்கு வாழ்வில்லை என்ற கருத்தை முன்வைத்தார்

அந்த நேரத்தில் நான் ஒரு மாணவனாக இருந்த காலம் .

மலையக தமிழ் தொழிலாளியின் உரிமை பறிக்கப்பட்ட அந்த செயல் என் போன்ற பல இளைஞர்களை பதைப்படைய செய்தது துடிக்க வைத்தது .

திரு செல்வநாயகம் அவர்கள் இந்த கருத்தை முன்வைத்தபோது அவருடன் சேர்ந்து இயங்க தொடங்கினோம்

என்னுடைய இருபதாவது வயதில் திரு செல்வநாயகம் அவர்களின் இந்த கருத்தோடு முன்வைத்து  தமிழ் மக்களுக்கு ஒரு தனியான பிரதேசம் ஒரு தனியான தாயகம் உண்டு. அதை ஒரு இணைப்பாட்சியின் அடிப்படையிலே தமிழர்கள் ஆளுகின்ற ஒரு நிலை ஏற்படவேண்டும் அந்த நிலை இல்லாவிட்டால் இலங்கையிலே தமிழினம் அழிந்துவிடும் என்ற கருத்தை முன்வைத்து நாடெல்லாம் நாம் பிரசாரம் செய்ய ஆரம்பித்தோம்

 ஆரம்பத்தில் எமக்கு கிடைத்த பரிசு . நாம் கூட்டங்கள் நடாத்த முற்பட்ட இடங்களில் எல்லாம் கல்மாரி

எத்தனையோ துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டோம்.

முதல் முதல் நாம் சந்திக்க நேர்ந்த பொதுத்தேர்தலில் மக்களால் நிராகரிக்க பட்டோம்.

1952 ஆம் ஆண்டு தேர்தலில் செல்வநாயகம் தொடக்கம் எமது வேட்பாளர்கள் பெரும்பாலோர் தோல்வி அடைந்தார்கள்

கோப்பாயில் திரு வன்னியசிங்கமும் திருகோணமலையில் திரு ராஜவரோதயமும் மாத்திரமே வெற்றி பெற்றார்கள்

அவ்வளவு தூரத்திற்கு தமிழன் ஒரு தனி இனம்அவனுக்கு ஒரு தாயகம் உண்டு அதை பேணி பாதுகாக்க வேண்டும் என்றகுரலை தமிழ் மக்களே நிராகரித்த காலம் ஒன்று இருந்தது

அந்த நேரத்தில் இன்று மறைந்து விட்ட இந்த இரு தலைவர்களும் .

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது அப்போது ஆலாலசுந்தரம் பதினைந்து பதினான்கு வயது சிறுவன் .ஆனால் எங்களுடைய மேடைகளில் பேசினார்

திரு தர்மலிங்கம் உடுவில் கிராமசபை தலைவராக தந்தை செல்வநாயகத்திற்காக உழைக்க தொடங்கினார்

இந்த விதையை தமிழ் இனம் தமிழனுக்கு  ஒரு தாயகம் அதை மீட்டெடுக்க வேண்டும் என்ற விதையை விதைத்த .

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு மேலாக யார் உழைத்தார்களோ அவர்களுடைய மார்புக்கு நேராக துப்பாக்கியை நீட்ட ஒரு தமிழனுக்கு  மனம் வந்ததே  என்று வேதனையில் துவண்டு போகாத மனம் இருக்க முடியாது

யார் இதை செய்தார்கள் என்று  சொல்லிவிட்டு போக நான் வரவில்லை . ஆனால் எங்களை நாங்களே ஏமாற்றி கொள்ள நான் விரும்பவில்லை . நம்மவர்கள்தான் இதை செய்தற்கள் என்பதில் சந்தேகமில்லை

என்ன நோக்கத்தோடு இதை செய்தார்களோ யாரும் தூண்டிவிட்டு இதை செய்தார்களோ எனக்கு தெரியாது.

இதை செய்த இளைஞர்கள் ஒன்றுமே தெரியாதவர்களாக இருக்கலாம் .வெறும் துப்பாக்கி சுட மாத்திரம்  தெரிந்தவர்களாக இருக்கலாம்

அரசியல் வரலாறே அறியாதவர்களாக இருக்கலாம் . ஆனால் அவர்களை ஏவிவிட்ட சக்தி எது?  அது எப்படி உருவானது என்பதை இந்த நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்

தமிழீழம் என்ற இலட்சியம் இன்று தமிழ் இனத்தினுடைய இதயத்திலே  ஆழமாக பதிந்து விட்ட ஒரு இலட்சியமாகி விட்டது.

அது அப்படி வேர்கொள்ள வைப்பதற்கு  இந்த தமிழீழம் என்கின்ற மரம் சிறு விதையாக மண்ணிலே போடப்பட்ட நேரத்தில் அதற்கு பாதுகாவலாக நின்றவர்களை இன்று அது பெரிய மரமாகி வளர்ந்து பல கிளைகளோடு அதன் கனியை நாம் பறிக்கலாம் என்று முயற்சித்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே அவர்களை துரோகிகளா என்று கூற யாரவது துணிவார்களாக இருந்தால் அவர்கள் அறியாதவர்கள் என்று நாம் கூறமுடியும் தவிர வேறு எதுவும் கூற முடியாது

எனக்கு யார் மீதும் கோபம் இல்லை . யார்மீதும் கோபத்தில் எதுவும் கூற நான் வரவில்லை
ஆனால் இந்த செயல் எங்கே போய் . எங்கே போய் முடியப்போகிறது என்பதை நாம் சற்று நினைத்து பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம் .    .




No comments:

Post a Comment