Friday, July 1, 2022

இலங்கை திராவிட முன்னேற்ற கழக தடைக்கு எதிராக திரு அமிர்தலிங்கம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை

 ராதா மனோகர் : . 22.07.1962  இல் ஆட்சியில் இருந்த ஸ்ரீ மாவோ தலைமையிலான அரசு இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தை தடை செய்வதாக அறிவித்தது . இந்த தடைக்கு எதிராக   நாடாளுமன்றத்தில் திரு அ அமிர்தலிங்கம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். வவுனியா எம்பி சிவசிதம்பரம் உட்பட பலர் இதை கண்டித்து உரையாற்றினார்க்ள
திரு அமிர்தலிங்கம் அவர்கள் உரையாற்றுகையில்  
...
"இந்த நாட்டில் மலையகத் தமிழ்மக்கள் மத்தியில் மூடப் பழக்க
வழக்கங்கள் ஒழித்து, சாதி பேதங்களை அகற்றி, அவர்களுடைய
மொழி, குடியியல் உரிமைகளைப் பெற்று, அவர்களும் இந்த
நாட்டில் மனிதர்களாக தன்மானத்தோடு வாழ வேண்டுமென்ற ஒரே
இலட்சியத்துக்காக உழைத்துவந்த திராவிடர் முன்னேற்றக்
கழகத்தை அரசாங்கம் தடைசெய்தது ஜனநாயகத்துக்கு
முரணானது! மனித உரிமைக்கு மாறானது என்பதைக்
கூறிக்கொள்கிறேன்.
உண்மையில் இந்தக் கழகம் மேற்கொண்ட
எந்த நடவடிக்கைக்காக இந்தத் தடை போடப்பட்டிருக்கிறது
என்பதை அரசாங்கத்திடமிருந்து நான் தெரிந்துகொள்ள
விரும்புகிறேன்.


இந்த கௌரவம் மிக்க சபையிலே சிம்மாசனப் பிரசங்க
விவாதத்தில் பேசிய பல்வேறு அங்கத்தவர்களும் இந்த திராவிடர்
முன்னேற்றக் கழகத்தினைப் பற்றி குறிப்பிட்டார்கள். கௌரவ
காலிப் பிரதிநிதி டபிள்யூ தஹா நாயக அவர்களும் திராவிடர்
முன்னேற்றக் கழகத்தினைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.
எனக்கு முன் பேசிய மட்டக்களப்பு இரண்டாவது பிரதிநிதி
ஏ.எப்.எம். மரைக்காயர் அவர்களும், நுவரெலியா பிரதிநிதி
வில்லியம் பெர்னாண்டோ அவர்களும் குறிப்பிட்டார்கள்.
வெலிமடைப் பிரதிநிதி கே.எம்.பி. இராஜரத்தினாவும், அவரது
பாரியார் குசுமா இராஜரத்தினாவும் இ.தி.மு.க-வுக்கு எதிராக
கர்ஜனை செய்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் கம்புறுபிட்டி
பிரதிநிதி பேர்ஸி விக்கிரம சிங்க அவர்களும் பிரஸ்தாபித்தார்கள்.
இவர்கள் எல்லோரும் குறிப்பிடும் இந்தப் பூதம் என்ன என்பதை
நான் குறிப்பிட வேண்டியதாகிறது.
இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகம் என்பது இன்று நேற்று
தோன்றிய ஓர் இயக்கமல்ல. நான் இலங்கையில்
சர்வகலாசாலையில் 1946 - 47-ம் ஆண்டளவில் கல்வி
கற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே இ.தி.மு.கழகம் இருந்தது.
கடந்த 16 ஆண்டுகளாக இந்தக் கழகம் இந்த நாட்டில் இயங்கி
வருகின்றது.
அவர்களது நோக்கம் இலங்கையில் வாழ்கின்ற
மலைநாட்டுத் தமிழர்கள் மத்தியில் முக்கியமாக சாதியின்
பெயரால் காணப்படும் பேதங்களை ஒழித்துக்கட்ட வேண்டும்
என்பதேயாகும்.
மூட நம்பிக்கையில் சிக்கி, காடனையும் மாடனையும் வணங்கி,
பலியிட்டுக் கூத்தாடி வாழும் மூட நம்பிக்கையில் இருந்து
அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதாகும். மலைநாட்டு மக்கள்
தன்மானம் பெற்றவர்களாக, பகுத்தறிவுப் பாதையில் செல்ல
வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இ.தி.மு.க. இயங்கி வருகிறது.
பெயரளவில்தான் தென்னிந்தியாவில் இயங்கும் திராவிட
முன்னேற்றக் கழகத்திற்கும் இ.தி.மு.க-வுக்கும் ஒற்றுமை
இருக்கிறதே தவிர, ஸ்தாபனரீதியாக தொடர்பு எதுவும் இல்லை
என்பதைத் தெள்ளத்தெளிவாகக் கூற வேண்டியது என்
கடமையாகும்.
இந்திய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அண்ணாதுரை
அவர்களும், செயலாளர் நெடுஞ்செழியன் அவர்களும், இலங்கை
திராவிடர் முன்னேற்றக் கழகத்துக்கும் தங்களுக்கும், எதுவிதமான
தொடர்பும் கிடையாது என்பதை எல்லோருக்கும்
கூறியிருக்கிறார்கள்.
இ.தி.மு.க. என்ற பெயரில் மூன்று
ஸ்தாபனங்கள் இருந்தாலும், இரண்டு ஸ்தாபனங்கள்
கொழும்பில்தான் இருந்துவருகின்றன. தோட்டப்பகுதியில் இருக்கும்
மற்றொரு ஸ்தாபனம் திருவாளர் இளஞ்செழியன் என்பவரைச்
செயலாளராகக் கொண்டது.
அவர்களுடைய நோக்கம் நாட்டைப்
பிரிப்பதல்ல. இ.தி.மு.க-வின் நோக்கம் நாட்டைப் பிரிப்பதுதான்
என்று யாராவது நிரூபிப்பார்களேயானால், நான் என்னுடைய
பாராளுமன்ற பதவியை ராஜினாமா செய்ய ஆயத்த
இருக்கிறேன்!

1 comment:

  1. நன்றி தோழர, பல பல தகவல்கள் தருகிறீர்கள்.

    ReplyDelete